அம்பிகையும் நாராயணனும்

 
பராசக்தியான தேவி ஸ்ருஷ்டியின் பொழுது ப்ரக்ருதியான புவனேஸ்வரியாகவும், ராஜ்ய பரிபாலனம் செய்யும் பொழுது பவானியாகவும், யுத்தத்தில் மஹாதுர்க்கையாகவும், பிரளய காலத்தில் மஹாகாளியாகவும், குழந்தை வடிவில் பாலா திரிபுரசுந்தரியாகவும், புருஷ ரூபத்தில் விஷ்ணுவாகவும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறும்.
 
 

பரமேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரர் ஸ்வரூபத்தில் தன் உடலின் இடப்பகுதியை உமையவளான பராசக்திக்கு அளித்தார்.அதே பரமேஸ்வரர் ஹரிஹரனாக காட்சி தரும் திவ்ய கோலத்தில் உமையவளுக்குண்டான  இடப்பகுதியில்  நாராயணர் காட்சி தருகிறார். இதுவே அன்னை புருஷ ரூபத்தில் விஷ்ணுவாக இருப்பதை ஊர்ஜிதபடுத்துகிறது.
 
 

கிருஷ்ணனின் புகழ் வாய்ந்த மற்றொரு பெயர் முகுந்தன். முகுந்தன் என்றால் முக்தியளிப்வன் என்று பொருள். அம்பிகையையும் இதே பொருளில் லலிதா ஸஹஸ்ரநாமம் முகுந்தா என்றழைக்கிறது.

அன்னையை வழிபடும் ஸ்ரீவித்யா மார்க்கத்தில் கோபால சுந்தரி என்று ஒரு வடிவம் உண்டு. பாதி தேகம் கோபால கிருஷ்ணனாகவும் இன்னொரு பாதி லலிதா மஹாத்ரிபுரசுந்தரியாகவும் இருக்கும் அற்புத கோலம். 
 
 

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் இயற்றிய பல அம்பிகை பரமான துதிகளில் விஷேச இடத்தை பெறுவது ஸ்ரீ செளந்தர்ய லஹரி. 100 ஸ்லோகங்களில் அம்பிகையின் பெருமையையும் அழகையும் விவரிக்கும் மந்திர நூலாக அருளினார். இப்படி பல வித பெருமைகள் பொருந்திய செளந்தர்ய லஹரிக்கு பல மஹான்கள் பாஷ்யம் (உரை) எழுதியுள்ளனர். 

ஆனந்தகிரி என்பவர் இயற்றிய உரையில் ஒவ்வொரு செளந்தர்ய லஹரியின் ஸ்லோகமும் அம்பிகையின் பெருமையை கூறுவதை விளக்கி விட்டு அதே ஸ்லோகம் ஸ்ரீமந் நாராயணரின் பெருமையையும் விவரிப்பதை விளக்கியுள்ளார். 
அந்நூலின் பெயரே கோபால சுந்தரி என்பது தான்.
 
 

இப்படி அன்னை லலிதையே கோபால சுந்தரி ஸ்வருபமாக மன்னார்குடியில் ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக அருளாட்சி புரிகிறாள். அதனாலேயே இங்கு ராஜகோபாலன் என்று மட்டும் அழைக்காமல் ஸ்ரீவித்யா ராஜகோபாலன் என்றழைக்கின்றனர். இங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணரும் மீனாக்ஷியை போல த்ரிபங்கி கோலத்தில் இடுப்பை ஒடித்து ஒய்யாராமாக காட்சி தருகிறார். 
 
 

பார் போற்றும் வைஷ்ணவ தலம் திருப்பதி திருவேங்கடமுடையான் திருக்கோயில். பொதுவாக பெருமாள் கோயில் கோபுரத்திலோ அல்லது விமானத்திலோ கருடன், ஆஞ்சனேயர் வடிவங்களை தான் காண்போம். சிவன் கோயிலென்றால் நந்தியையும், அம்பிகை கோபுரம் அல்லது விமானமென்றால் சிம்மத்தையும் பார்க்க முடியும்.
 
 

ஆனால் திருப்பதி வேங்கடமுடையான் நிற்கும் மூலஸ்தானத்திற்கு மேலாக எழுப்பப்பட்டிருக்கும் விமா விமானத்தில் சிங்கங்களை காணலாம்.
அது மட்டுமா வேங்கடமுடையானுக்கு எப்பொழுதும் பட்டு புடவை தான் சார்த்தப் படுகிறது. முக்கியமான ப்ரம்மோற்சவமும் சாரதா நவராத்திரி காலத்திலே நடைபெறுகிறது.
 
 

உடுப்பி கிருஷ்ணர் சரத் ருதுவில் வரக்கூடிய சாரதா நவராத்திரி காலம் முழுவதும் புடவை அணிந்து விதவிதமான அம்மன் அலங்காரங்களில் காட்சி கொடுக்கிறார்.

நவராத்திரி  சமயத்தில் பெரும்பாலான பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கே விதவிதமான அலங்காரம் செய்யப்படும். தாயாரை ஊஞ்சலிலோ அல்லது கொலு மண்டம்பத்திலோ மட்டுமே எழுந்தருளச் செய்வர்.
 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூலோக கைலாயம் - சிதம்பரம் பகுதி 1

சதாக்ஷி - கடும் பஞ்சம் தீர்த்த ஆயிரம் கண்ணுடையாள்!

மகிமை மிக்க ஸ்ரீமாதங்கி பீடம் - மதுரை